பக்கம்:கனிச்சாறு 3.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  73


71  இலங்கைத் தமிழர்க்கு என் கண்ணீர் !


இலங்கையில் தமிழ மக்கள்
எத்தனை யோநூற் றாண்டாய்
விலங்குக ளோடும், தீய்க்கும்
வெயிலொடும் குளிரினோடும்
கலங்கிய கண்ணீ ரோடும்
கடுமையாய் உழைத்து ழைத்துப்
புலங்களைத் திருத்தி னார்கள்!
புதுப்புலம் விளைவித் தார்கள்! 1

காடுகள் அழித்து, நல்ல
கழனிகள் தோற்று வித்தார்!
மேடுகள் குழிகள் எல்லாம்
சமநிலை மேவச் செய்தார்!
மாடுகள் போலு ழைத்தும்
மண்வளம் பெருக்கி வாழ்ந்தும்
நாடுகள் அற்ற, வாழ்க்கை
நலமற்ற, குடிக ளானார்! 2

நினைக்கையில் உயிரும் நெஞ்சும்
நெருப்பாகிக் கனலும்! நல்ல
பனைக்கீடாய் உழைப்பைத் தந்தார்;
பயன்தினை யின்றிப் போனார்!
வினைக்கவர் உரியர் என்றால்,
விளைவுக்கும் உரியர்; ஆனால்,
மனைக்கொரு நிலமும் இன்றி
அடிமையாய் மாள்கின் றாரே! 3

கல்விக்கங் குரிமை யில்லை;
சிங்களம் கற்றல் வேண்டும்!
செல்வத்தைச் செய்வா ரேனும்
செழிப்புள்ள வாழ்க்கை யில்லை!
பல்வளம் பெருக்கு கின்ற
பாட்டாளி மக்க ளேனும்
நல்வள வாய்ப்பு மின்றி,
நலிவோடு வாழ்த லுற்றாரி! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/102&oldid=1424593" இலிருந்து மீள்விக்கப்பட்டது