76 ☐ கனிச்சாறு - மூன்றாம் தொகுதி
தமிழர்க்குத் தமிழர் நாட்டில்
தனியர சுரிமை இல்லை;
தமிழர்க்கிங் குடம்புக் கூட்டில்
தமிழுயிர் ஓடல் இல்லை;
தமிழரின் குருதி யோட்டம்
தனித்தமிழ் ஓட்டம் இல்லை;
தமிழரைத் தமிழர் நாட்டில்
தமிழனே மதிப்ப தில்லை!
13
அடிமைக்கோ ரடிமை தன்னால்
ஆகிடப் போவ தென்ன?
மிடிமைக்கு மிடிமை யாங்ஙன்
மேல்துணை வருதல் கூடும்?
விடிவிலாத் தமிழன் சொந்த
வீட்டிலும் வறுமை காய்ந்தால்
மடிதட்டி வரவா செய்வான்
தம்பியின் மலைப்ப சிக்கே?
14
கொடுமையாம் கொடுமை! என்றன்
குலமே, நீ கேட்டுக் கொள்க!
கடுமையிற் கடுமை என்னல்
உரிமையில் கவலை யற்றல்!
நெடுமையாங் கால மாக
தமிழ்க்குல மரபே, நீதான்
கெடுமையை நலமென் றெண்ணிக்
கீழ்மையை உரிமை என்றாய்!
15
இலங்கையில் தமிழர் கூட்டம்
இழிசெயப் படுவ தற்கும்,
கலங்கிய அதன் கண் ணீரைத்
துடைத்து நீ காவா தற்கும்,
விலங்கொன்றுன் காலில் கொண்ட
விளைவதே கரணம் என்பேன்!
துலங்குயர் விடுத லைதான்
இருவர்க்கும் துணையாம் இன்றே!
16