பக்கம்:கனிச்சாறு 3.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  95

மாயாத் தமிழினத்தின்
வாகைக் களிறுகளே!
சாயாத் தமிழ்மரபின்
சாகா உருவங்களே!
காயாத உங்கள்
குருதியின்மேல் ஆணையிட்டோம்!
தாயகத்தை மீட்போம்!
தமிழீழம் காண்போமே!

-1983



85  தமிழீழம் வாழ்க!

தங்கத் தாயகம் தமிழீழம் வாழ்க!
தமிழர்கள் உரிமையால் தழைத்தின்பம் சூழ்க!
பொங்கிய உணர்வினால் பூத்தது நாடு!
புதுமையும் நலன்களும் பொலிந்ததெம் வீடு! (தங்கத்)

ஊமைகள் பேசினர்; ஒழிந்ததிங் கடிமை!
உன்மத்தம் தொலைந்தது; ஓய்ந்தது மிடிமை!
ஆமைகள் எழுந்தன! ஆர்த்தன புலிகள் !
அயலவர் ஆட்சி அகன்றது நாட்டில்! (தங்கத்)

ஒற்றுமை மலர்ந்தது; உரிமைகள் கண்டோம்!
ஒழிந்தன பிளவுகள்! உறவுகள் கொண்டோம்!
வெற்றி முரசங்கள் விண்வெளி தோயும்!
வீரச் சுடரொளி நிலமெங்கும் பாயும்! (தங்கத்)

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/124&oldid=1424616" இலிருந்து மீள்விக்கப்பட்டது