பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 99
90 தமிழ் மானம் நிலைபெறும்!
பாராண்ட தமிழ்வேந்தர் பைந்தமிழைத் தலைவைத்தே
நீராண்ட இலங்கையினை நிழலாண்ட கதைகேட்டோம்!
நீராண்ட இலங்கையினை நிழலாண்ட கதைமாறிப்
போராண்ட செந்நிலமாய்ப் புலமாறிக் கொண்டுளதே!
தென்புலத்தார் வடபுலத்தைத் திசைவென்று கொடிநாட்டி
வன்புலத்துச் செந்தமிழை வாழவைத்த கதைகேட்டோம்!
வன்புலத்துச் செந்தமிழை வாழவைத்த கதைமாறிச்
சிங்களத்துப் புல்லியர்கைச் சிதைந்தழியக் கொண்டுளதே!
தென்னகத்துப் பெருஞ்சோழன் தேர்ந்தபடை முன்னனுப்பி
முன்னகத்துச் சிங்களரை முறியடித்த கதைகேட்டோம்!
முன்னகத்துச் சிங்களரை முறியடித்த கதைமாறி
என்னகத்துத் தமிழர்க்கே இடர்மிகுத்துக் கொண்டுளதே!
சிங்களரைச் சிதறடித்துச் சீர்த்திமிகு செந்தமிழர்
தங்களது யாழகத்தில் தனித்தரசு நாட்டுவரோ?
தங்களது யாழகத்தில் தனித்தரசு நாட்டுவரேல்
மங்கிவரும் தமிழ்மானம் மண்ணுலகில் நிலைபெறுமே!