பக்கம்:கனிச்சாறு 3.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  45


சந்துக்குச் சந்துகொள்ளை; சாராயம்; புளிங்கள்!
சரமாரிக் கையூட்டு! தலைமறைவாய் ஊழல்!
முந்திக்குத் தாழ்வில்லை; ஆனாலும் கொஞ்சம்
மூக்குத்தான் உடைந்துவிட்ட தென்றிடுவார் ஆள்வோர்!

ஐயய்யோ, தமிழகமே! அருந்தமிழத் தாயே!
அளப்பரிய திட்டங்கள்; பேச்சுவிளம் பரங்கள்!
பொய்யான விளக்கங்கள் புளுகுரைகள்! ஆனால்
புழக்கடையில் சாய்க்கடையில் தெருக்கடையில் வாழும்
மெய்யான உருவங்கள் அப்படியப் படியே!
மிகையில்லை, உண்மையிது! தமிழர்களே இன்னும்
செய்யாத சமையலுக்குக் காத்திருக்க வேண்டாம்!
சிந்திப்பீர் ஒருவழியாய்த் தமிழ்நிலத்தை மீட்பீர்!

-1979


43  இழந்த உரிமைகள் உழந்து பெறுக!

வையம் வாழ்த்தும்
வள்ளுவர் பெயரால்
பொய்யாம் குலமதப்
புன்மைகள் தவிர்த்துக்
கட்சிகள் என்னும்
களைகள் அகற்றி,
நச்சுக் கொள்கையின்
நலிவுகள் நீக்கி,
உலகத் தமிழினம்
ஒன்றுபட் டியங்குக!
இலகு செந்தமிழ்
எங்கும் பரப்புக!
பாழ்மை விலக்குக!
பழைமை புதுக்குக!
ஏழ்மை விரட்டுக!
இனிமை வித்துக!
இழந்த உரிமைகள் இனியே
உழந்து பெறுக
உலகத் தமிழரே!

-1979
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/74&oldid=1424565" இலிருந்து மீள்விக்கப்பட்டது