பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 67
என்கொள்கை மாறாது !
எத்தனை முறை எனைச் சிறையிலிட் டாலுமே
என் கொள்கை மாறாது! - ஒரு
பித்தனை, ஆண்டியைப் போல் என்றன் உள்ளமும்
பேதைமை கூறாது!
எத்தனை அரசியல் புரட்டர்கள்! எத்தர்கள்!
ஏய்ப்பதே வாழ்வு(அ)வர்க்கே! - ஒரு
சித்தனை, அறிவனைப் போல்மக்கள் வாழ்க்கையே
சிந்தனை, செயல் எனக்கே!
ஏச்சுகள் இழிவுகள் எவையுமென் தொண்டினை
இம்மியும் அசைப்பதில்லை! - வாள்
வீச்சுகள், குண்டுகள் உடல்பிளந் தாலுமே
விளைவினில் மாற்றமில்லை!
பூச்சுகள், புனைவுகள், புரட்டுகள், எத்துகள்,
பொய்,எனைச் சார்வதில்லை! - விடும்
மூச்சுகள் ஒவ்வொன்றும் தமிழ், இனம்,நாடு - எனும்
முழக்கினில் சோர்வதில்லை!
அரசெனை எதிர்த்தாலும், அதிகாரம் பணித்தாலும்
அச்சமென் நெஞ்சிலில்லை! - ஒரு
முரசினைப் போலவே கொள்கை முழக்குவேன்!
மூச்சிலும் கெஞ்சலில்லை!
உரசியென் உடலினைப் பாறையில் தேய்த்தாலும்
உறுதியில் குறைவதில்லை! - தமிழ்
அரசினை நிறுவவே உண்கிறேன்; உடுக்கிறேன்!
அஃதின்றி மறைவதில்லை!