இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 69
பிடுங்கிய உரிமையை மீட்பது தவறா?
வெள்ளைக் காரனை விடுதலை கேட்டதும்
வெறிவட வரைநில விடுதலை கேட்பதும்
கொள்ளும் பொருளினில் ஒன்றுதான் என்பதைக்
குருடரும் செவிடரும் உணர்ந்திடல் வேண்டும்!
கொள்ளை யடிப்பவன் அண்டையன் எனினும்
குன்று, மலை, கடல் கடந்தவன் எனினும்
சள்ளையும் ஒன்றுதான்! சழக்கும் ஒன்றுதான்!
சரிநிகர் தமிழக விடுதலை சமைக்கவே!
கருமைப் பாடுளக் கன்னட வெறியன்
காவிரி நீர்தர மறுப்பதைக் கண்டும்,
எருமைப் பாடெனத் தில்லியில் இருப்போன்
எம்மின அழிவினைத் தடுத்திட முனையான்!
ஒருமைப் பாடென, ஒற்றுமை என்ன
உலுத்த வாயர்கள் உளறுவ தெல்லாம்
பெருமைப் பாடெனப் பேசுதல் சரியா?
பிடுங்கிய உரிமையை மீட்பது தவறா?
-1992