பக்கம்:கனிச்சாறு 4.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 73


49

உயர்வும் தாழ்வும் !


கடலில் மிதந்தோம்;
தரையில் ஊர்ந்தோம்;
காற்றில் பறந்தோம்; என்றாலும்,
உடலில் பொறையும்
உளத்தில் நிறையும்
ஒருங்கே இழந்தோம்! உயர்வாமோ?

அழகில் மிளிர்ந்தோம்;
அறிவில் ஒளிர்ந்தோம்;
ஆய்வில் சிறந்தோம்; என்றாலும்
பழகில் பகையும்
பண்பில் புரையும்
பகட்டில் இழந்தோம்! பயனாமோ?
நகர்கள் அமைத்தோம்;
நாடுகள் கண்டோம்;
நாற்புறம் விரிந்தோம்! என்றாலும்,
அகவொளி இருண்டோம்!
அன்பில் தாழ்ந்தோம்!
அழிவில் வீழ்ந்தோம்! அறிவாமோ?

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/108&oldid=1440738" இலிருந்து மீள்விக்கப்பட்டது