இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 93
62
ஏமாறிப் போகாதீரே!
தனிநலத்தில் நாட்டமுற்றுத் தமிழினத்தின்
நோக்கமின்றிக் கட்சிகளின் தலைவ ரெல்லாம்
பனிநிலத்தில் மலத்திரளைக் குவிப்பதுபோல்
பசும்பச்சை இழிமொழிகள் பரக்கக் கூறிக்
கனிமரத்தில் வீற்றிருக்கக் கல்லெறிந்து
காயடிக்கும் கயமையினை என்ன சொல்வோம்!
இனிவுரத்த உணர்வுகொள்வீர் இளைஞர்களே!
இத்தகையோர்க் கேமாறிப் போகாதீரே!
மறுத்தொருவர்க் கொருவர்விடும் அறிக்கைகளும்
மனங்கூசும் இழிவுரையும் தமிழர் மாண்பை
அறுத்தெடுக்கும் வகையல்லால்-பகைவரெல்லாம்
அவைகூறி நகைக்கின்ற நிலையே யல்லால்-
நிறுத்தெடுக்கும் விளை வென்ன? கட்சிகளின்
நிலையறிவீர்! நெடுந்தமிழைப் பேணுதற்கே
சிறுத்தையெனப் பாய்ந்தெழுவீர்; இளைஞர்களே
இத்தகையோர்க் கேமாறிப் போகா தீரே!
-1980