இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 99
68
எண்ணமும் செயலும் !
எண்ணங்கள் வலியன!
எண்ணிய வற்றுள்
திண்ணமாய்ச் சரியென
நினைத்ததை எழுதுக!
எழுதிய வற்றைப்
பலமுறை படிப்பாய்!
பழுதிலாக் கருத்தையே
பரப்பிட முயல்வாய்!
பரப்பிய கருத்துக்கு
மறுப்புக்கள் பலவரும்!
திருப்பி யவற்றைத்
தேர்வுசெய்! ஒன்றுதேர்!
தேர்ந்து தெளிந்த
கருத்துக்குச் செயல்படு!
நேர்ந்த செயலுக்கு
எதிர்ப்புகள் வரலாம்!
எதிர்ப்புகள், ஏளனம்,
இழிவுகள் கண்டு,
விதிர்விதிர்ப் புறாமல்
வேகமாய் வினைபடு!
ஊக்கமும் வலிமையும்
உள்ளத்தின் உரமும்
தாக்குறும் எத்தகை
எதிர்ப்பையும் தகர்க்குமே!
-1985