பக்கம்:கனிச்சாறு 4.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  213


வாருங்கள் கலைஞர்களே! - இழி
வழுக்கலும் இழுக்கலும்
அழுக்கும் இலாமலே
வளர்கலை நாம் சமைப்போம்! - பண்பு
வளமைக்குத் துணையிருப்போம்!

வாருங்கள் நண்பர்களே! - உங்கள்
வாழ்த்தினைக் கூறுங்கள்!
வல்லமை தாருங்கள்!
வலிய ஓர் இயக்கம் செய்வோம்! - அதன்
வளர்ச்சிக்குக் கைகொடுப்போம்!

-1981
 

154

இணைபவர்கள் இணையட்டும் !


பேசியவர் எல்லாரும் பேசிக்கொண்
டிருக்கட்டும்; பின்பு றம்போய்
ஏசியவர்கள் எல்லாரும் ஏசிக்கொண்
டிருக்கட்டும்; இறுமாப் பாய்க்கை
வீசியவர் எல்லாரும் வீசிக்கொண்
டிருக்கட்டும்; வினைகள் செய்வோம்!
பாசியகன் றிவ்வினத்தின் பளிங்குநீர்
தெளிவிப்போம்! பங்கேற் பீரே!

முகந்திருப்பிக் கொள்பவர்கள் முணுமுணுப்புச்
செய்யட்டும்; முரண்பா டுற்றே
அகந்திருப்பிக் கொள்பவர்கள் அண்ணாந்து
விம்மட்டும்; அகல்நி லத்தை
நுகந்தூக்கித் தோள்வலிக்க உழுதுபயிர்
விளைத்திடுவோம்! நோகா தங்கே
உகந்துண்ண வருவோர்க்கே உவந்தளிப்போம்!
உழைப்பளிக்க உதவு வீரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/248&oldid=1444629" இலிருந்து மீள்விக்கப்பட்டது