பக்கம்:கனிச்சாறு 4.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 கனிச்சாறு – நான்காம் தொகுதி


11

தமிழ்க்கு மூவுடைமை !


எடுப்பு

நீயே,செந்தமிழ்த் தாயே!,நான்
நினையறிந் தவன்; ஒரு சேயே! - முன்
நிலைகெட மிகவும்நொந் தாயே; - என்
நெஞ்சினில் எழுந்தது; எழுந்தது தீயே! (நீயே)

தொடுப்பு


ஓயேன்; இனியுன்றன் உழைப்பினில் சாயேன்!
உடல் பொருள் ஆவியும் ஈவேன்! ஈவேன்! (நீயே)

முடிப்பு


காயே விழைவார்; கனிச்சுவை அறியார்!
கண்விழிப்பார்; உளம் விழியார்; - தமிழ்த்
தாயே! நின்னறம் நின்பொருள் பேணார்!
தம்செயல் அறிவுக்கு நாணார்! நாணார்! (நீயே)

அயல்மொழி பயில்வார், அதனடி துயில்வார்!
அரும்பொருள் அயில்வார்; நினையார்; - மதி
மயலுறப் பிறன்கைச் சிறுபொருள் ஆனார்!
மற்றிவர் செயலுக்குக் கூனார்! கூனார்! (நீயே)

பால்கறந் தேபிற கன்றினுக் கூட்டியே,
வால்கறப் பார்கழி மூடர்!, - அது
போல்சிறந் தாயுனைப் பிறர்கொளத் தந்தார்!
புன்மொழி அறிந்துளம் நொந்தார்! நொந்தார்! (நீயே)

-1962
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/49&oldid=1440468" இலிருந்து மீள்விக்கப்பட்டது