பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 35
20
அயர்வைக் கொல்லடா ! தோளை உயர்த்தடா !
உள்ளம் விழுந்ததா? தூக்கி நிறுத்தடா!
உடலம் சோர்ந்ததா? மேலும் வருத்தடா!
கள்ள மாந்தராம் கயவர் நடுவிலே,
கடுமை உழைப்படா; மகிழ்ச்சி முடிவிலே!
1
உறவு பகைத்ததா? உதறித் தள்ளடா!
ஊரும் வெறுத்ததா? எதிர்த்து நில்லடா!
துறவுப் போக்கிலே, தூயர் துணையிலே
துணிவைக் காட்டடா, கொள்கைப் புணையிலே!
2
வறுமை உற்றதா? பசியைக் கொல்லடா!
வாழ்க்கை கசந்ததா? துயரை வெல்லடா!
பொறுமை கொள்ளடா, புல்லர் உரையிலே!
பூட்கை சாற்றடா வெற்றிக் கரையிலே!
3
சூழ்ச்சி மிகுந்ததா? உரையில் விழுத்தடா!
சூடு பறக்கநின் உணர்வில் கொளுத்தடா!
தாழ்ச்சி செய்யுமுன் பகைவர்க் கிடையிலே,
தமிழை நினையடா, வேங்கை நடையிலே!
4
பொய்மை நிறைந்ததா, வெடித்துச் சிரியடா!
பூண்ட வெற்றிகள் சரிக்குச் சரியடா!
மெய்மை ஒளிர்வதே பொய்ம்மை இருளிலே!
மேட்டைக் காண்பதே பள்ளச் சரிவிலே!
5
புகழ்ச்சி மொழிகளோ தூசென் றெண்ணடா!
புனைவுச் சொற்களோ புழுதி மண்ணடா!
இகழ்ச்சி நெரித்ததா? சோர்வைப் புதையடா!
ஏசு புத்தரும் உணர்ந்த கதையடா!
6
வினைக்குத் தனியனோ? வெற்றி நினக்கடா!
விரகு, சூழ்ச்சிகள் துண்டு துணுக்கடா!
நனைக்கும் பனி, மழை, நறுக்கும் வெப்பமோ,
நலிவைத் தருமெனில் தொண்டுக் கொப்புமோ?
7
ஒற்றை உழவிலும் கற்றை விளைவடா!
உண்மைப் பயிரிலும் ஊழ்க்கும் களையடா!
அற்றைப் புகழெலாம் இற்றை உயிர்ப்படா!
அயர்வைக் கொல்லடா! தோளை உயர்த்தடா!
8