70 ☐ கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி
79
சிற்றெறும்பு!
பையன்:சிற்றெறும்பே! சிற்றெறும்பே!
செல்வதெங்கே சொல்லுவாய்?
சிற்றெறும்பு:புற்றை நோக்கிப் போகிறோம்;
பொழுது வீழப் போவதால்!
பையன்:பற்றிக்கொண்டு செல்வதென்ன?
பாடுபட்ட செல்வமோ?
சிற்றெறும்பு:குற்றி வைத்த அரிசி மாவின்
குறுநொய் கொஞ்சம் கிடைத்ததே!
பையன்:கூட்டி வைக்கும் செல்வம் யாவும்
கொட்டிக் காப்ப தெங்கேயோ?
சிற்றெறும்பு:வீட்டை யொன்று கட்டி வைத்து
வேலி போட்ட புற்றிலே!
பையன்:மேட்டின் மீது புற்றை நீங்கள்
கட்டி வைத்த தென்னவோ?
சிற்றெறும்பு:ஈட்டி வைத்த கூலம் யாவும்
ஈரஞ் சேரா திருக்கவே!
பையன்:ஒன்று பின்னை ஒன்றாய்ப் போகும்
ஒழுக்கம் கற்ற தெங்ஙனம்?
சிற்றெறும்பு:நன்று கேட்டாய்! எவ்வுயிர்க்கும்
நல்லொழுங்கே வாழ்க்கையாம்!
பையன்:குன்று போலக் குவித்த செல்வம்
கூடி யுண்ப தெங்ஙனம்?
சிற்றெறும்பு:ஒன்று வாழ்வு! யாவும் வாழ
உண்டு செல்வம் உலகிலே!
பையன்:சேர்த்து யாவும் கூடியுண்டால்,
செல்வம் தீர்ந்து போகுமே?
சிற்றெறும்பு:தீர்ந்து போகில் யாவுங் கூடி
ஊர்ந்து சென்று சேர்ப்பமே!