பக்கம்:கனிச்சாறு 5.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  127


127

புரட்டர் உலகம் இதுவடா!


பொய்யும் புளுகும்
புனைவும் நிரம்பிய
புரட்டர் உலகம் இதுவடா! - இதில்
மெய்யும் ஒழுங்கும்
மேன்மை உறுவது
மிகவும் கடினம் உணரடா!

கையும் களவும்
காழ்ப்பும் உடைய
கழிசடை மாந்தர் வாழ்கிறார்! - இவர்
செய்யும் வினையும்
செருக்கும் நிறைந்தே
சீர்மை மாந்தர் தாழ்கிறார்!

-1983


128

பிறப்பினை வரலாறாக்கிடுவாய்!


ஊரில் உலகில் ஆயிரம் நடக்கும்!
ஒன்றையும் பெரிதாய் எண்ணாதே! - உன்
உளத்தைச் சேறாய்ப் பண்ணாதே! - முன்
பாரினில் வாழ்ந்த பயனுடை யோரின்
பாதையில் நீயும் நடையிடுவாய்! - உளப்
பதைப்புக் கென்றும் தடையிடுவாய்!

நெஞ்சில் நினைவுகள் ஆயிரம் மலரும்!
நிலைப்பன எண்ணி எடையிடுவாய்! - உள
நேர்மையை என்றும் கடைப்பிடிப்பாய்!
பிஞ்சில் பழுத்தே உதிர்ந்து போகாதே!
பிழையெனக் கண்டதை நீக்கிடுவாய்! - உன்
பிறப்பினை வரலா றாக்கிடுவாய்!

-1983
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/161&oldid=1444907" இலிருந்து மீள்விக்கப்பட்டது