பக்கம்:கனிச்சாறு 6.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  113


நோக்குங் கண்ணுங் கேட்குஞ் செவியும் நுண்ணணுவாய்த்
தேக்கும் அறிவும் உள்ளத் திறனுந் தெளிந்துணராப்
போக்கும் நிலையும் உய்வும் தெய்வும் பொலிந்திருக்க
நாக்குங் குடலும் மட்டும் பேணி நலிவீரே! 8

நெஞ்சங் கரையார்; நினைவுந் தெளியார்; நிகழ்வறியார்;
அஞ்சும் அஞ்சும் அஞ்சு ளொடுங்கி அமைந்தவுடல்,
எஞ்சும் போதில் எஞ்சுவ விஞ்சுவ அறியாமல்
பஞ்சும் பொதியும் போலநினைவார், பயனிலரே! 9

ஏவும் நெஞ்சும் இணையும் பொறியும் எதிர்ப்புலனும்
வாவும் அறிவும், அவற்றின் முதிர்வால் வல்லுடலுள்
கூவுங் குரலும் கேளார், உணரார், புறந்திரிந்த
மாவும் புள்ளும் என்றே மதிக்கப் பெறுவாரே! 10

-1962
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/139&oldid=1445406" இலிருந்து மீள்விக்கப்பட்டது