பக்கம்:கனிச்சாறு 6.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  123


81

எவ்வழி நினைவோ, அவ்வழி நிகழ்ச்சி!


உனக்கு முன்னும், இவ்
வுலகம் இருந்தது!
உனக்குப் பின்னும், இவ்
வுலகம் இருக்கும்!
ஊழியிற் சுழலும், இவ்
வுலக வண்டியில்
நாழியே ஏறிடும்
நல்வழிப் போக்கன், நீ!

தொடங்கிய தெங்கே?
தொடர்வது மெங்கே?
அடங்கா முடிவினில்
அடைவது மென்ன?
என்பவை எல்லாம்
எண்ணினும் விளங்கா!
மன்பதைக் கடலுள்
மண்துகள் அசைவு, நீ!

எந்த இடத்தினில்
இறங்கிடு வாயோ?
அந்த நொடிவரை
ஆர்ப்பரிக் கின்றாய்!
சொந்தமும் சுற்றமும்
சுழன்றிடும் அணுக்கள்!
சிந்துகண் ணீரும்
சிரிப்பும் கனவுகள்!

வந்தது நினையாய்!
வழிதடு மாறுவாய்!
வெந்தது தின்றிட
வீணிற் பேசுவாய்;
மந்தையில் ஆடுபோல்
மனத்தைச் சுழற்றுவாய்!
முந்தையர் விட்ட
முழுமை தொடருவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/149&oldid=1445418" இலிருந்து மீள்விக்கப்பட்டது