பக்கம்:கனிச்சாறு 6.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  129


உடல் உல(கு) ஆட்சி
ஒழங்குற நடந்திடும்!
உடலுறுப் பனைத்தும்
ஒத்துழைத் தியங்கும்!

இருக்கும் ‘நான்’ உணர்வே
இறுமாப்பின் இயங்கினால்,
செருக்கு மிகுந் தாட்சி
சீர்கெட்டுப் போகும்!

உடம்பின் பூதங்கள்
ஒவ்வொன்றும் நலமுடன்
திடம்பெற அமைதலே
முதன்முதல் தேவையாம்!

அவரவர் உடம்பை
ஆளப் பழகலே
எவர்க்கும் இயற்கை
ஈந்த வாழ்க்கையாம்!

அறிவெனும் இறைமைத்
துணையுடன் மாந்தச்
செறிவெனும் நன்மனம்
சீர்மையோ டியங்குதல்

உடலுலக ஆட்சி
நடைபெற உதவிடும்!
கடனிதாம் எவர்க்கும்;
கடமை தவ றாதீர்!

-1989
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/155&oldid=1445425" இலிருந்து மீள்விக்கப்பட்டது