பக்கம்:கனிச்சாறு 6.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  35


22

நிலவு சொல்லாதா?


கன்னியை எண்ணாரோ? - காதல்
கனியை உண்ணாரோ?
காத்துக் கிடக்கும் யாழை மீட்டி
இசைக்கப் பண்ணாரோ? - இன்பம்
பிசைந்து தின்னாரோ?

என்னை வெறுத்தாரோ? - இல்லை
எண்ண மறுத்தாரோ?
ஏங்கிக் கிடக்கும் கிளியைத் தூக்கி
இணை நிறுத்தாரோ? - முகத்தை
எதிர் நிறுத்தாரோ?

மறந்து போவாரோ? - இங்குப்
பறந்து மேவாரோ?
மங்கை யிருக்க ஒருத்தியைப் போய்
மணந்து நோவாரோ? - என்
மடியில் தாவாரோ?

இரவு சொல்லாதா? - அன்றை
இரவு சொல்லாதா?
இளைக்க இளைக்க இன்பம் விளைத்த
உறவு வெல்லாதா? - காதல்
உறவு வெல்லாதா?

நிலவு கொல்லாதா? - எரிக்கும்
நிலவு கொல்லாதா?
நித்திலப் படுக்கை விரித்துக் கொடுத்த
நிலவு கொல்லாதா? - எனை
நெருக்கத் தள்ளாதா?

தேரில் வருவாரோ? - முத்தம்
நேரில் பெறுவாரோ?
தேடித்தேடி அலையும் விழிக்குத்
துன்பந் தருவாரோ? - இல்லை
இன்பந் தருவாரோ?

-1954
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/61&oldid=1445115" இலிருந்து மீள்விக்கப்பட்டது