பக்கம்:கனிச்சாறு 7.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  101


75

பொய்யிலாப் புலவன்
புகழ் வாழியவே!


தம்மனை நினையான்; தமிழ்நினைத் திருந்தான்;
தம்மக்கள் பேணான்; தமிழைப் பேணினான்!
தம்பொருள் காவான்; தமிழ்காத் திருந்தான்!
தம்நலம் விழையான்; தமிழ்நலம் விழைந்தான்!
தம்துயர் போக்கான்; தமிழ்த்துயர்க் கெழுந்தான்!
மும்மைப் பொழுதும் முத்தமிழ் மொழிக்கெனத்
தம்மைத் தந்தான்; தம்வாழ் விழந்தான்!
தன்னேர் ஆவி தமிழுக் களித்த
மன்னன்! பாவலன்! மாத்தமிழ் மறவன்!
பாடலுக் கொருவன்! பைந்தமிழ் வென்றி! 10
கேடுறுந் தமிழ்க்குக் கேடயம்! நெடுவாள்!
கூனற் பகைமுன் குமுறும் எரிமலை!
வேனில் வெங்கதிர்! வீசும் கொடும்புயல்!
புதுவையி னின்று பாடிய பூங்குயில்!
எதுபைந் தமிழுக் கேற்றம் விளைக்கும்
என்றே கருதி இசைத்த பேரியாழ்!
குன்றா நாவும் கொதித்த நெஞ்சுமாய்
வானமும் அதிர முழங்கிய வல்லிடி!
கான வேங்கை! கனல்தெறி களிறு!
இமைநடுங் காமல் இரவும் பகலும் 20
நமையும் நாட்டையும் காத்த காவலன்!
அன்னோன் நல்லுடல் அழிந்த தாயினும்
என்றும் வாழ்ந்தது வாழ்ந்தது இவன்உயிர்!
வையப் பெரும்பெயர் வழிவழிக் கொண்ட
பொய்யிலாப் புலவன் புகழ்வா ழியவே!

-1967
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/146&oldid=1446201" இலிருந்து மீள்விக்கப்பட்டது