பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 217
182
இறைக்குருவனாரின் ‘வலம்புரி’
இதழ்க்கு வாழ்த்து!
நிலம் பெரிது; வளம் பெரிது; நிலத்தைச் சூழ்ந்த
நீல்வண்ணக் கடல்பெரிது; கடலில் சென்ற
கலம் பெரிது; புகழ் பெரிது; தமிழர் வாழ்ந்த
கதைபெரிதே -என்றாலும் இன்றைக்குற்ற
சிலம்பரிதாந் துயர்பெரிதே! குனிந்து வாழுஞ்
சிறுமைநிலை மிகப்பெரிதே! - இவற்றுக் கெல்லாம்
வலம்புரிதன் முழக்காலே முடிவு காணும்;
வாழ்வுதரும் தமிழ்க்கெனவே வாழ்த்துவமே!
183
முனைப்புடன் பேணுக!
தென்மொழி காத்த நெடுஞ்சேர லாதனென்
திறல்மிகு மறவரிங் கெழுந்து,
தென்மொழி யணியில் தீச்சுடர் எனுமோர்
தீந்தமிழ் இதழினைத் தொடங்கிப்
புன்மொழி யடர்த்துப் புலைமொழி வீழ்த்திப்
புதுநடை நடந்திட நினைந்து,
நன்மொழி, இன, நிலம் காத்திட முனைந்தார்!
நாமவர் விறல்வாழ்த் துவமே!
ஒச்சடர்ந் தெழுந்தால் பகைவர்கள் ஓடும்
உயர்தமிழ்ப் பேரினம் இன்று
பேச்சடர்ந் திருக்கச் செயல்மறங் குன்றிப்
பிணமெனக் கிடந்திடும் வேளை,
பாச்சுடர் எழுத்தால் தீச்சுடர் கொளுத்திப்
பயனுறும் வினைசெய முனைந்து
மூச்சடர்ந் தெழுமிவ் விதழினைத் தமிழர்
முனைப்புடன் பேணுக நன்றே!