பக்கம்:கனிச்சாறு 7.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  17


காலைமுதல் மாலைவரைக் கொடியர் வாழ்வைக்
கண்டுள்ளம் வெந்தவகை மீற, மீற,
மாலையிலே பகலவனின் குருதி ஆறு,
மடைதிறந்து விட்டதுபோல் செம்மைப்பூச்சு,
சாலையிலும், மனைகளிலும், விழுந்துதங்கச்
சாயலினை யூட்டிப்பின் நீலவண்ண
வேலையிலும் வெள்ளிநிற அருவிமேலும்,
விழுந்ததுசெம் மணலெல் லாம்தங்கத்தூவல்!

செம்பரிதிப் பெருவிளக்கை யணைத்துவிட்டுச்
செம்மையெழி லோடுகுளிர் ஒளியைவீசும்
அம்புலியாஞ் சிறுவிளக்கை இயற்கைநங்கை
‘அவனி’யெனுந் திருவீட்டிற் கேற்றிவைத்தாள்.
செம்மைநிறம் நீங்கியெழில் நிலவுப்பூசல்
சிறுபொருளி னுருத்தெரியும் வகையில்நிற்க
தம்மைமறந் தின்காற்றி லுடலைத் தோய்க்கும்
தன்னலத்தார் கன்மனத்தார் வீடுசென்றார்!

நிலவினொளி யோடுமின் னொளிவிளக்கு
நெடும்பாதை யிருமருங்கு மெழிலைப்பூசும்
பலவகையின் வண்ணவொளி விளக்குதோயும்
பகட்டெல்லாம் அந்நகரின் பெருமைகாட்டும்
உலவிவரும் மக்களெல்லாம் நெடியபாதை
ஓரங்கள்தாம் மறையும் வகையாய்ச்சென்றார்!
குலவிவரும் காதலர்கள்; குழவிக்கூட்டம்!
கூன்கிழடோ டேழைமக்கள் திரும்பக்கண்டேன்.

வெளிநாட்டி னின்றுவருங் கலங்கட்கெல்லாம்,
வழிவிளக்கும், நெடியமனை முகட்டினின்று
ஒளிவீசும்! ‘சென்னையிது; சென்னை'யென்று
ஓடுகடல் மீதுவரும் மக்கள்நெஞ்சில்
களியூட்டும் வகையாக வானைமுட்டும்
கலங்கரையின் விளக்கத்தின் விளக்கம்கூறின்,
‘எளியோர்கள் மாள, அவர்கள் உழைப்பில்வாழும்
ஏழுமனைக் காரர்களின் ஊர்’ என்றோதும்!

நடுத்தெருவின் இயங்கிகளோ டியங்கும்மக்கள்,
நாளடங்க நடக்கின்ற பாதைதன்னில்
படுத்துறங்கும் காட்சியினைக் கண்டுகண்டு
பதைபதைத்துத் துடிதுடித்துப் போனேன்! பெண்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/62&oldid=1446013" இலிருந்து மீள்விக்கப்பட்டது