பக்கம்:கனிச்சாறு 8.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  111


(வேறு)


மதுவால் அழிவது மானம் என்றே
த. தோ ழப்பன் சொல்வார்!
மதுவால் அழிவது குலமும் என்றே
பன்னீர்ச் செல்வன் சொல்வார்!
மதுவால் அழிவது கல்வியென் பதையே
பொன்னியின் வளவன் சொல்வார்!
மதுவால் அழிவதே அறிவுதான் என்றே
அரங்க சாமியிங் குரைப்பார்!

(வேறு)


“பொருளழியும் மதுக்குடிப்பால் எனும் பொருளின் பாட்டைப்
புலவர் இரா.பண் டரிநா தன்வந்திங் கிசைப்பார்;
இருள்சூழும் முயற்சியெலாம் மதுக்குடிப்பால் என்றே
இங்குவந்து தமிழேந்தி எடுத்தெடுத்துச் சொல்வார்!
மருளழிந்த மதிமிகுந்தீர்! பெருமைமிகக் கொண்டீர்!
மானத்தை, நற்குலத்தை, கல்வியறி வதனை,
பொருள்முயற்சி தம்மையெல்லாம் யாரிழக்கச் செய்வார்?
பொதுமைநலம் வேண்டியதைப் பொறுமையுடன் கேட்பீர்!

(வேறு)


முதற்கண்,
மதுக்குடிப்பால் அழிகின்ற மானந்தன்னை
மதிமிகுந்த தோழப்பன் எடுத்துச் சொல்வார்!
மதுக் குடிப்புப் போலில்லை தமிழ்க் குடிப்பு;
மதிக் குடிப்பு! தேன்குடிப்பு! அமிழ்தம் தோய்ந்த
புதுக்குடிப்பு! பாக்குடிப்பு! பருகு தற்குப்
புளிப்பில்லை; தனியினிப்பு தமிழினிப்பு!
எதுக் குடிப்புத் தவிர்த்தாலும் தமிழ்க் குடிப்பை
எந்தமிழர் மேற்கொள்க! உயிரி னிக்கும்!

(தோழப்பன் ‘மானப்’ பாட்டு)


அடுத்து,
புலவர்பொன்னி வளவனையே அறியார் இல்லார்;
பொலமிகுந்த புலமைநலம் வாய்ந்தார் அன்னார்,
சிலவர்போ லன்றியிவர் சிரிப்பை மட்டும்
சிந்துகின்ற புலவரல்லர்; கருத்தை வாரிக்
கலகலெனப் பாக்கள்விளைக் கின்ற உள்ளம்!
கனித்தமிழைப் பெற்றெடுக்கும் தாய்மைமிக்க
புலவரிவர்; அவர்பாட்டில் மதுவினாலே
கல்விநலம் போக்கடிக்கும் புதுமை காண்போம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/125&oldid=1448468" இலிருந்து மீள்விக்கப்பட்டது