பக்கம்:கனிச்சாறு 8.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  119

சிவன்முதலாய் வீற்றிருந்த கழகமெனச் சொன்னார்!
செந்தமிழ்மேல் பாவேந்தன் உயிர்கிடந்து தூங்கி
உவந்துநிறை வுற்றதுபோல் ஒருபுலவர் வாழ்வும்
ஓ! ஓ! ஓ! எனவியந்து போற்றும்படி இல்லை!

‘கரும்புதந்த தீஞ்சாறே, கனிதருவின் சுளையே
கவின்முல்லை வெண்ணகையே’
எனும்பாட்டில் தமிழை
விரும்பியவன் ‘அன்பே,அன் பே!யன்பே!’ என்று
விளித்திடுங்கால், உயிருடலம் அனைத்துந்தமி ழாக
அரும்பிமலர்ந் துலகமெலாம் அளாவியிருப் பதுபோல்
அரியவுணர் வொன்றுநம்மின் உள்ளத்தில் தோன்றும்!
பெரும்புதுமை இதுவன்றோ? எப்புலவன் தமிழைப்
பேச்சுக்கும் மூச்சுக்கும் ‘அன்பே’என் றழைத்தான்?

இவ்வாறாய்ப் பாவேந்தன் கருத்துநலன் எல்லாம்
எடுத்தெடுத்து நீங்களெல்லாம் சுவைக்கும்படி ஈவர்,
இவ்வாறு தமிழ்ப் புலவர் - இன்றமிழ்ப்பா வாணர்;
இருந்துநலங் கேட்டிடவும் யான்வேண்டு கின்றேன்!
ஒவ்வாத பாடல்பல கேட்டிருப்பீர்! உங்கள்
உள்ளமெல்லாம் நாறடிக்கும் அப்புலவர் கூட்டம்!
அவ்வாறாய் இப்புலவோர் பாடஅறி யார்கள்!
அருந்தமிழ்கே ஒளிசேர்க்கும் புலவரிவர் காண்பீர்!

பின்னுரை:

பாவேந்தர் கருத்துநலன் பாப்புலவர் சொன்னார்!
பழகுதமிழ்ச் சொல்லருமை கேட்டிருந்தோம் நாமும்!
பூவேந்தும் நறுந்தேனைச் சுவைத்திடுந்தே னீக்கள்
போலன்றோ நாம்சுவைத்தோம்! புலவரெலாம் வாழ்க!’
சாவேந்திச் சென்றதெனப் பாவேந்தைச் சொன்னார்!
சரியில்லை என்போம்நாம்! செந்தமிழ்த்தீம் புலவர்
நாவேந்தி வாழ்கின்றார் பாவேந்தர்! உண்மை!
நாடெல்லாம் வீடெல்லாம் அவர் வாழ்கின் றாரே!

செந்தமிழ்க்கே அவர்பிறந்தார்; செந்தமிழ்க்கே வாழ்ந்தார்;
செந்தமிழ்க்கே மூச்சுயிர்த்தார், செந்தமிழ்க்கே பேசிச்
செந்தமிழ்க்கே அவருழைத்தார்; செந்தமிழாய் நின்றார்;
செந்தமிழ்க்கே ஒளியேற்றிச் செந்தமிழ்க்கே மாய்ந்தார்!
செந்தமிழ்க்கே பாவேந்தால் செழும்பெருமை அன்றோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/133&oldid=1448478" இலிருந்து மீள்விக்கப்பட்டது