பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 133
தன்னேரில் லாததமிழ்த் தனிமொழியாய்க் காணேனோ?
இவ்வை யத்தில்
முன்னேறும் மொழிகளிலே தமிழ்மொழியும் ஒன்றெனவே
முழங்கே னோநான்!’
5. வீரம்
வீரம்அவன் பாக்களிலே செறிந்தோடி நிற்கும்!
விளையாட்டுத் தமிழ்ப்பேச்சும் வெந்தணலாய்க் காய்ச்சும்!
ஈரம்அவன் தமிழ்ப்பாட்டில் இருந்தாலும் எதிரி
எலும்பினையும் நீறாக்கும் சொற்கள்விளை யாடும்!
பாருங்கள் வகைக்கொன்றாய்ப் பாவேந்தன் உள்ளம்
பகைமுன்னம் கனல்கக்கும் வரிகளைச்சொல் கின்றேன்!
சேருங்கள் ஒருமனமாய்! ஓருடலாய்! உயிராய்!
செந்தமிழின் பெரும்படையில் சேருங்கள் இனியே!
‘தமிழர்க்குத் தொண்டுசெயும் தமிழனுக்குத்
தடைசெய்யும் நெடுங்குன்றம் தூளாய்ப் போகும்’.
‘இருளினை வறுமை நோயை
இடறுவேன்; என்னு டல்மேல்
உருள்கின்ற பகைக்குன் றைநான்
ஒருவனே எதிர்ப்பேன்’
‘செழிப்போரே! இளைஞர்களே!
தென்னாட்டுச் சிங்கங்காள்!
எழுகநம் தாய்
மொழிப்போரே வேண்டுவது!
தொடக்கஞ்செய் வீர்வெல்வீர்!
மொழிப்போர் வெல்க!’
‘கடல்போலும் எழுக! கடல் முழக்கம்போல்
கழறிடுக! தமிழ்வாழ் கென்று!
கெடல் எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!’
‘அரசிருந்த தமிழன்னை ஆட்சியிலே
சூழ்ச்சி செய்யும் ஆட்கள் யாரும்
எரிசருகு! தமிழரிடை எழுச்சியுறும்
தமிழார்வம் கொழுத்த தீ!தீ!’
‘சிம்புட் பறவையே சிறகை விரி!எழு!