பக்கம்:கனிச்சாறு 8.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 27


4. உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு

(தி.பி. 2000 சிலை கங-ஆம் நாள் (28.12.69இல்) பறம்புக்குடியில் நடைபெற்ற
உலகத் தமிழ்க் கழக முதல் மாநாட்டில் நிகழ்த்திய பாட்டரங்கத்
தலைமையுரை)

முன்னுரை:

பெயரா வியற்கைப் பெருவானும், வானத்(து)
அயரா தியங்குகின்ற ஆர்கதிரும் விண்மீனும்
திங்களும் கோளும் திரிகின்ற செம்போக்கும்
எங்குமோர் ஆற்றல் இருக்கின்ற மெய்ம்மையும்
உள்ளத் திருத்தி உறுபொருளை ஆங்கிருத்தித்
தெள்ளத் தெளிந்தநறுந் தீந்தமிழாய் ஊற்றெடுக்கும்
வெள்ளத் துணர்வை விரித்துரைப்பேன்; செம்புலவர்
கொள்ளத் தகுமளவோர் குன்றிமணி ஆனாலும்
செந்தமிழ்த்தாய்க் கேற்ற செழும்பொன் மணியென்றே
எந்தமிழைப் பேண இறைஞ்சி வணங்குகின்றேன்!

பேரறிவு சான்ற பெரியோரே! தாய்மாரே!
ஆர்தலுறும் செந்தமிழ அன்பரீர்! நல்லிளைஞீர்!
பாட்டரங்கம் ஏறவந்த பாவலர்காள்! நும்மை - தமிழ்ப்
பூட்டறுக்க வந்தவர்போல் போற்றிவர வேற்கின்றேன்.
செந்தமிழைப் பாடுதற்குச் சேர்ந்தொருங்கே வீற்றிருப்போம்
எந்தமிழை நாம்பாட என்னதிறன் பெற்றுவிட்டோம்?
அன்றுதிரு வள்ளுவனார் ஆன்ற திருக்குறள்போல்
ஒன்று செய்ய வல்லோமா? ஓங்குயர்ந்த நற்சிலம்பு
மேகலைபோல் தெய்வத் திருமூலர் மந்திரம்போல்
சாகாப் பெருநூல்கள் சாயலிலே நாமொன்று
செய்திறன் பெற்றோமா? இல்லெனினும் செந்தமிழ்க்கே
வெய்யபகை தானும் புறத்தே வெருட்டினமா?

செந்தமிழ்க்கு வந்தபகை மாய்த்திடவே சேர்ந்தமெனத்
தொந்தோம்தொந் தோமெனவே துள்ளிக் குதிப்பதல்லால்
எந்தப் பகைகளைந்தோம், எல்லாரும் உட்பகைத்தோம்!
சொந்த நலங்கண்டோம்; சொந்த இனமறந்தோம்!
வாழ்கதமிழ் வாழ்கதமிழ் என்றபடி வாழ்த்திவிட்டு
“வாழ்வதற்கே என்ன வகைகிடைக்கும்” என்றெண்ணி
நன்மை கிடைக்குமெனில், நாற்காசு சேருமெனில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/41&oldid=1447653" இலிருந்து மீள்விக்கப்பட்டது