பக்கம்:கனிச்சாறு 8.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


6. பாவேந்தர் பாரதிதாசன்

(காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் 9.2.73இல் நடைபெற்ற
முத்தமிழ் விழாப் பாட்டரங்கில் பாடியது)

பாப்புலவர் தந்திறமை பாடும் அரங்கிற்கு
மாப்புலவ ராய்த்தலைமை சான்ற மதிமிகுந்தீர்!
பேரா சிரியப் பெருமாண்பீர்! கல்வியெனும்
ஆரா வமிழ்துண்ணும் ஆண்மைமிகு மாணவரீர்!
எல்லார்க்கும் என்றன் இனிய தமிழ்வணக்கம்!

சொல்லார்க்கும் பாட்டில் சுவையார்க்கும் வண்ணம் இங்குத்
தெய்வப் புலவர் திருவள் ளுவர்ப்பற்றி,
கைவருசெஞ் சொற்புலவர் கம்பர் திறம்பற்றி,
ஈட்டுபுகழ் மாயா இளங்கோ எழில்பற்றி,
பாட்டுக் கொருபுலவன் பாரதி சீர்பற்றிப்
பாப்பொழிந்து வைத்தார்கள்; பாராட்டிக் கேட்டீர்கள்!
நாப்பொழிவால் உள்ளம் நனைந்து பதம்பட்டு
வித்துதற்கு நல்ல விளைநிலமாய்த் தோன்றுகின்றீர்?
கத்துதற்குத் தேவையில்லை; கன்னித் தமிழ்விதைகள்,
பாவேந்தன் பாவிதைகள் பன்னூறு வைத்துள்ளேன்.
சாவேந்தா நல்வி கள் சாவியாய்ப் போவதில்லை.
அந்த விதையெல்லாம் அள்ளித் தெளிக்கின்றேன்.
எந்த வகையாய் விளையுமென எண்ணுகின்றீர்,
உள்ளத்தே ஊன்றி உயிரில் முளையெடுக்கும்.
வெள்ளத் துணர்வில் விளைந்து பயிராகும்.
காலத்தே முற்றிக் கருத்துக் கதிர்சாய்க்கும்.
ஞாலத்தே நம்விளைவு நல்ல விலைபோகத்
தக்கவொரு நேரமிது! நல்ல தமிழ்விளைச்சல்
மிக்க பரவுமொரு மேலான காலமிதாம்!

அக்காலந் தன்னில் அடியெடுத்து வைக்கின்றோம்!
எக்காலும் ஞாலம் இருண்டிருக்கப் போவதில்லை.
போர்த்த இருளொருநாள் போகத்தான் போகும்;எழில்
ஆர்த்த ஒளிவந்தே ஆளத்தான் ஆளும்;எமை
மாய்த்த இழிநிலைகள் மாளத்தான் மாளும்;இதை
வாய்த்த பெரும்புலவன் வான்முட்டச் சொல்லி விட்டான்!
பாரதிதா சன்,அவன்பேர்; பாரதிக்கும் நல்லாசான்!
ஈரமிகு நெஞ்சால் இவனவற்குத் தாசனென்றான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/64&oldid=1447926" இலிருந்து மீள்விக்கப்பட்டது