பக்கம்:கனிச்சாறு 8.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  63

செவ்வைக் கிருபை, செழுங்கருணை, அஞ்சலிக்கை
முத்தி முழுச்சுவர்க்கம் முற்றும் உரைக்கட்டும்!

இத்தனையும் சேரட்டும் என்ன பயனுண்டாம்?”


- என்றே உலகியல் இயம்பக் கேண்மின்!
அன்றே எழுதியதால் ஆறேழு வடசொற்கள்
வந்து கலந்ததலால் கருத்தில் வழுவுண்டோ?
சொந்த வெறுப்பின்றிச் சொல்லுவதற் காருளரே!
பொதுக்கருத்து போகட்டும்! புலவர் புகன்ற
புதுக்கருத் தொன்றைப் புரட்டிப் பார்ப்போம்!
மருமகட்கு மாமி விருந்தோம்பும் மாண்பை
அருமைத் தமிழில் அறிய உரைக்கின்றார்!

“முன்வைத்த முத்துத் தயிரிருக்கும்; பின்னறையில்
வெண்ணெய் விளாங்காய் அளவிருக்கும் - கன்றே
மறக்கினும் அம்மாவென் றழைத்து மடிப்பால்
கறக்கப் பசுக்காத் திருக்கும் - சிறக்கவே”

“சேலத்து அங்காடிச் சேயிழையார் நாள்தோறும்
வேலைக் கிடையில் மிகக்கருத்தாய்த் - தோலில்
கலந்த சுளைபிசைந்து காயவைத்து விற்கும்
இலந்தைவடை வீட்டில் இருக்கும் - மலிந்துநீர்
பாய்நாகர் கோயில் பலாச்சுளையின் வற்றலினைப்
போய்நீபார் பானையிலே பொன்போல - தேய்பிறைபோல்
கொத்தவரை வற்றல்முதல் கொட்டிவைத்தேன், கிள்ளையே
வைத்தவரை உண்டுபின் வையாமைக் - குத்துன்பம்
உற்றிடச்செய் ஊறுகாய் ஒன்றல்ல கேட்பாய்நீ
இற்றுத்தேன் சொட்டும் எலுமிச்சை - வற்றியவாய்
பேருரைத்தால் நீர்சுரக்கும் பேர்பெற்ற நாரத்தை!
மாரிபோல் நல்லெண்ணெய் மாறாமல் - நேருறவே
வெந்தயம் மணக்கஅதன் மேற்சாயம் போய்மணக்கும்
உந்துசுவை மாங்காயின் ஊறுகாய் - நைந்திருக்கும்
காடி மிளகாய் கறியோடும் ஊறக்கண்
ணாடியிலே இட்டுமேல் மூடிவைத்தேன் - தேடிப்பார்!
........................................................................
கீரை தயிர் இரண்டும் கேடு செயும் இரவில்!
மோரைப் பெருக்கிவிடு முப்போதும் - நேரிழையே
சோற்றை அள்ளுங்கால் துவள்வாழைத் தண்டில்உறும்

சாற்றைப்போ லேவடியத் தக்கவண்ணம் - ஊற்றுநெய்யை!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/77&oldid=1448042" இலிருந்து மீள்விக்கப்பட்டது