பக்கம்:கனிச்சாறு 8.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 67


வெளிப்படை யாகப் பொருள்தரும் சொற்கள்!
விளக்கிடப் பிறரோ உரைகளோ வேண்டா.
துளிப் பிச காத உணர்வின் தொடையல்!
தோகைக் குறும்பினை இன்னும் கேளுங்கள்:

‘கறிகள் சமைத்தபின் தெருவினில் விற்றிடும்
காய்களை ஓடி அழைப்பதுவும்

சிறுவிரல் மோதிரம் பார்ப்பதுவும், பார்த்து
மகிழ்வதும், செவ்விதழ் சேர்ப்பதுவும்
அறையினை நோக்கலும் நேற்றிலையே, இன்று
அப்படிப் பூரிப்ப தேதுக்கடி?
பிறநகர் சென்றவன் - என்மகன்- ஊர்வரப்
பெற்ற மகிழ்ச்சித் திருக்கூத்தோ?

கச்சையை நோக்கலும், கண்கள் மலர்வதும்
கைவளை யைச்சரி செய்வதுவும்,
மொச்சை உரிக்கையில் முன்கட்டில் ஓடி, மு
ழங்கும் சிலம்படி மீளுவதும்,
பச்சைப் பசுங்கிளி தானெனக் கொஞ்சலும்
பார்த்தில னேஇன்று பூரிப்பதேன்?
அச்சீமை சென்றவன் - என்மகன் - வீட்டை

அடைந்த மகிழ்ச்சித் திருக்கூத்தோ’?


மருமகள் பூரிப்பை மகிழ்வொடும் குறும்பொடும்
அருமையாய் உரைக்கும் பாவேந்தர் அருந்திறன்
எத்துணைப் பெரியது! எத்துணைச் சிறந்தது!
இத்துணைச் சிறப்பாய் எவரெடுத் துரைத்தார்?
இக்கா லத்துத் திரைப்படப் பாடலை
முக்கலும் முணகலும் முறுகலும் திருகலும்
கெக்கலி இசையொடு கேட்டுமுகஞ் சுளிக்கும்
அருவருப் புணர்ச்சியிப் பாடலில் உண்டா?
பெருமகிழ் வன்றோ பின்னிப் பிணையும்!
காசடிக் கின்ற கயவரின் கண்கள்
மாசிலா இத்தகு மாண்புடைப் பாடல்கள்
பக்கந் திரும்புமா? பயனும் விளையுமா?
எக்காலத் தந்நிலை எய்துவ திங்கே?

புதிய மனநிலை புகட்டும் பாவலர்
முதியோர் காதலை முழக்குதல் கேளீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/81&oldid=1448048" இலிருந்து மீள்விக்கப்பட்டது