பக்கம்:கனிச்சாறு 8.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 75


தமிழ்உள்ளம் நாட்டுப்பற்று தகுவுயர் சீர்திருத்தம்
இமியுமே குறையாவாறு இருந்தன அவர்பால்!
தமிழ்உள்ளம் அவர்க்கே உள்ள தனியுள்ளம்!
இதற்குமுன் யார்க்கும் இல்லா தது,அது!

‘இன்பத் தமிழ்மொழி எமது! - எமக்
கின்பம் தரும்படி வாய்த்தநல் லமுது!’ - என்றதும்,

‘கனியிடை ஏறிய சுளையும் முற்றற்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!’ - என்றதும்

‘செந்தா மரைக்காடு பூத்தது போல
செழித்த என்தமிழே ஒளியே வாழி!’ - என்றதும்,

‘செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித் தேனே!
நைந்தாய் எனில் நைந்து போகும் என் வாழ்வு!
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே?’ - என்றதும்,

‘எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
தனையீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்

செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாகும்! - என்றதும்,


தமிழ்மேல் அவர்க்குள்ள காதலைக் காட்டும்!
தமிழ்க்காக வாழ்ந்தார், தமிழைப் பாடினார்;
தமிழைத் தொழுதார்; தமிழைப் புதுக்கினார்!

‘தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என்

தாய்தடுத் தாலும் விடேன்’ - என்று


தமிழ்க்காகப் போரிட்டார்;

‘இன்பத் தமிழ் குன்றுமேல் தமிழ்

நாடெங்கும் இருளாம்’ - என்று

கவன்றார்; அறிவுறுத்தினார்; கண்ணிமையாது காத்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/89&oldid=1448087" இலிருந்து மீள்விக்கப்பட்டது