பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

47


பசியினால் களைத்துப் படுத்துத் துயிலும் புலியின் வாலை வேண்டுமானாலும் வளைத்து ஒடிக்கலாம். ஆனால் காதல் நோயில் சிக்கிக்கொண்டவனைத் தொந்தரவு செய்தால், அவன் புலியினும் சீறுவான், எதுவுஞ் செய்வான், எவர்க்கும் அஞ்சான் எதையுங் கருதான். ஆம்! இன்னமும் மனிதன் மாடமாளிகை கூடகோபுரத்தைவிட, மங்கையின் அன்பையே பெரிதென எண்ணுகிறான். பொன்மணி பொருளைவிட தனது பிரியையின் புன்சிரிப்பே பெரிதெனக் கருதுகிறான். எதையும் இழப்பான், காதலை இழக்கத் துணியான். எது இல்லாமற் போய்விடினும், “இதுதான் நம் நிலை; என் செய்வது” எனத் தன்னைத்தானே தேற்றிக்கொள்வான். ஆனால் மனத்தில் குளிர்ச்சி ஊட்டும் மனோகரி ஒருத்தி இல்லையெனில் அவன் செத்த வாழ்வு வாழ்வதாகவே கருதுவான். பருவமும், பழக்க மிகுதியால் வரும் சலிப்பும் ஒரு சிறிது இக்குணத்தைக் குறைக்கலாம். அடியோடு மாற்றுவதென்பதோ, அந்தக் குணமே வரவொட்டாது தடுத்துவிடுவதென்பதோ முடியாத செயல் ஆகும். கிடைக்காவிட்டால் கிலேசப்படும் உள்ளம், கிடைத்ததைக் கெடுக்க யாரேனும் முற்பட்டால், அவர்களைக் காலடியில் போட்டு மிதித்துத் துவைத்துவிடவே எண்ணும்.

கருப்பையா அந்நிலையில்தான் இருந்தான். அவன் கொண்ட நட்பு, கள்ளத்தனமானதுதான்; துரோகத்தின் மீது தோற்றுவிக்கப்பட்டதுதான்; மருண்ட இளமனத்தை மிரட்டிப் பெற்றதுதான் என்றாலும், “தான் பெற்ற இன்பம் பிறனுக்குச் செல்வதென்றால்” அவமானம் பொறுக்கவில்லை. சிங்காரவேலனுக்கும் ராதாவுக்கும் ஏதோ நடக்கும்போலத் தோன்றுகிறது எனக் கோகிலம் கயிறு திரித்தாள். அது கருப்பையாவின் மனத்தைக் கலக்கிவிட்டது.

மறுநாள் மாலை, தோட்டத்தில் கோகிலம் குறிப்பிட்டபடியே ஊடல் காட்சி ஆரம்பமாயிற்று.