பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

கபோதிபுரக்


“மோசக்கார வேடதாரியே கேள்! இனி உன் முடிவு காலம் கிட்டிவிட்டது. நீ பிழைக்க வேண்டுமானால், அந்த சாரதா போட்டோவை என்னிடம் தந்துவிட ஏற்பாடு செய். இல்லையேல் உன்னை கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மீது ஏற்றி ஊர்வலம் வரும்படிச் செய்வேன். உஷார்” என்றான் பரந்தாமன்.

“சாரதாவின் போட்டோவிலே என்ன ரசம் கண்டீர்” எனச் சாகசமாகக் கேட்டாள் கோகிலம்.

“அதிரசம்” என்று அலட்சியமாகப் பதிலளித்தான் பரந்தாமன்.

யோகி, மங்கையின் மலரடி தொழுதான். அவள் முதலில் மறுத்தாள். பிறகு திகைத்தாள். கடைசியில் அண்ணனிடமிருந்து அப்படத்தைத் திருடிக்கொண்டு வருவதாகக் கூறினாள்.

“புறப்படு” என்றான் பரந்தாமன்.

“போவோம்” என்றாள் கோகிலம்.

நள்ளிரவில், கோகிலமும் பரந்தாமனும் மெல்ல சிங்காரவேலன் ஜாகை சென்றனர்.

கோகிலம், படத்தை அதன் ‘நெகட்டிவ்’ உள்பட, திருட்டுத்தனமாக எடுத்து, பரந்தாமனிடம் கொடுத்துவிட்டு, “நீ மிரட்டினதற்காக நான் இதனைத் தருவதாக எண்ணாதே. முன்னாளில் நீ சாரதாவிடம் கொண்ட காதல் இவ்வளவு காலத்துக்குப் பிறகும் அணையாதிருப்பது கண்டு, மகிழ்ந்தே இதனைத் தருகிறேன். நான் அறிவேன் உன் சேதி யாவும், அன்றொரு நாள் தோட்டத்தில் அவள் எல்லாம் என்னிடம் கூறினாள். ஆனால் நான், நீ காதல் இழந்ததுடன், வேறு வாழ்வில் புகுந்திருப்பாய் என்றே எண்ணினேன். இன்றுதான் கண்டேன், அன்று அவள் தீட்டிய சித்திரம் இன்னமும் இருப்பதை” என்று மிகுந்த வாஞ்சையுடன் கூறினாள்.