பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

கபோதிபுரக்


தன் மோசம் வெளிக்கு வரும். தன்பாடு பிறகு நாசந்தான். இந்நிலையில் மாதக் கப்பம் கட்டத் தவறிவிட்டது. மருட்டி உருட்டிக் கடிதம் வந்தது. சாரதா கைக்கு எப்பொருளும் சிக்கவில்லை. இருவருக்கும் சண்டையோ நிற்கவில்லை. சாரதா, சற்று கடுமையாகப் பேசிவிட்டாள். கருப்பையாவின் சித்தம் கலங்கிவிட்டது. “ஒரு முழம் கயிறுக்குப் பஞ்சமா, ஊரில் ஒரு மரமும் எனக்கில்லையா” என சாரதாவிடம் வெறுத்துக் கூறினான். அப்படியே செய்தும்விட்டான். பிணமானான்! இரண்டொரு மாதத்தில் புளியமரத்துப் பிசாசுமாவான் ;

சாராதாவின் நிலைதான் என்ன? சிங்காரவேலனின் மிரட்டல் கடிதம் அவளைச் சிதைக்கத் தொடங்கிற்று.

ஊர்க்கோடியில் ஒரு மாந்தோப்பு. அதில் உள்ள கிணறு ஆழமுள்ளது. அதுதான் தனக்குத் துணை என முடிவு செய்தாள் சாரதா. அந்த முடிவு செய்தது முதற்கொண்டு அவள் முகத்தில் வேதனை தாண்டவமாடிற்று. விதி என்னை இப்படியும் வாட்டுமோ என்றெண்ணுவாள் வேதனைக்கோ நான் பெண்ணாய்ப் பிறந்தேனோ என்பாள். கணவன் தன் மனைவியின் கலக்கத்தை அறியான், அவள் உடல் இளைப்பது கண்டு, மருந்து கொடுத்தான்.

பரந்தாமன் போட்டோவை எடுத்துக்கொண்டு அழகாபுரிக்குப் புறப்பட்டான். இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்தான். இடியும் மழையும் இணைபிரியாது அழகாபுரியில் அவதி தந்தது. குளம், குட்டை நிரம்பி வழிந்து ஓடிற்று. பெருங்காற்று அடித்தது, சாலை சோலையை அழித்தது. மரங்கள் வேரற்று வீழ்ந்தன. மண்சுவர்கள் இடிந்தன. மாடு கன்றுகள் மடிந்தன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிற்று. ஊர் தத்தளித்தது. வந்துள்ள வெள்ளம், தன்னைக் கொள்ளைகொண்டு போகவேண்டும் எனச் சாரதா மாரியை வேண்டினாள்.