பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கப்பலோட்டிய தமிழன்


சிதம்பரம், சிவில் கிரிமினல் இரண்டின் வழக்குகளையும் ஏற்று நீதிமன்றத்திலே புகழ் பெற்றார். ஆனால், அவருக்கு கிரிமினல் துறையிலேதான் அதிக வழக்குகள் வாதாட வந்து கொண்டிருந்ததால், அவரது முழுக் கவனமெல்லாம் கிரிமினல் துறையிலேயே பதிந்தது. நாளடைவில் அவர் புகழ் பெற்ற கிரிமினல் வக்கீலாகப் பெயரெடுத்தார். வருமானமும் நாளுக்கு நாள் பெருகியது. அவர் எடுத்துக் கொண்ட கிரிமினல் வழக்குகளில் எல்லாம் வெற்றிமேல் வெற்றி பெற்று வந்தார். அப்பகுதியிலே அவருக்கு கிரிமினல் வக்கீல் என்ற புகழ் பெருகி வரலாயிற்று.

சில வழக்குகள் வெற்றி பெறாது என்று அவர் உணர்ந்தால், அப்படிப்பட்ட வழக்குகளில் வாதாடி அவரது நேரத்தை வீணாக்காமல், பெயரையும் கெடுத்துக் கொள்ளாமல்; அந்த வழக்குகளைச் சமரசம் செய்து வைத்துத் தனது கட்சிக்காரர்களைத் திருப்திப் படுத்துவார். இது, அவரது நுட்பமான வாதாடும் புத்திக்கு வெற்றிப் படியாக அமைந்தது.

வழக்குக்காக வரும் கட்சிக்காரர்களிடம் ஏற்றத் தாழ்வு காட்டாமல், எல்லாரிடமும் அன்புடன் பேசி, எடுத்துக் கொண்ட வழக்குகள் தோல்வியுறாமல் வழக்குகளை நடத்தும் அவரது திறமைகளை உணர்ந்த அப்பகுதி மக்கள், அவரிடம் தனியொரு மதிப்பும், மரியாதையும் காட்டி மகிழ்ச்சியடைந்தார்கள்.

ஏழை மக்கள் மீது போலீசார் பொய் வழக்குகளைத் தொடுத்துள்ளார்கள் என்பதை அவர் நெஞ்சார உணர்ந்தால் - அந்த ஏழைகளிடம் பணமே பெறாமல் வழக்குகளை அவர் ஏற்று வாதாடி வெற்றி தேடித் தருவார்.