பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

13


இதனால், போலீஸ்துறை அவருக்கு விரோதமாகி விடுமே என்று அவர் அச்சப்பட்டதே இல்லை. இந்தப் பழக்கம்தான் அவருக்கு எதிர்காலத்திலே வெள்ளையர் ஆட்சியை வேரறுக்கும் அஞ்சாமை உணர்வை உருவாக்கியது எனலாம்.

ஆனால், போலீஸ் துறையானது அவருக்கு அன்று முதலே பகையானது. வ.உ.சி. போலீசாரிடையே எப்போது வகையாகச் சிக்குவார் என்று சமயத்தை காவலர்கள் எதிர்நோக்கியே இருந்தார்கள். அதற்கேற்றவாறு, போலீஸ் அதிகாரிகள், தலைமை போலீஸ்காரர்கள் ஆகியோர், சுப்பிரமணியம் என்பவரைக் கொலை செய்ததாக வந்த ஒரு வழக்கில் வ.உ.சி.யையும் சேர்த்துக் குற்றவாளியாக்கி வழக்குப் பதிவு செய்தார்கள்.

சுப்பிரமணியம் கொலை செய்யப்பட்டதாக வந்த அந்த வழக்கில், வ.உ.சியை நீதிமன்றத்தில் வாதாட விடக்கூடாது என்ற அச்சத்தாலேயே அவரையும் சேர்த்துக் குற்றவாளியாகப் போலீசார் வழக்கைப் பதிவு செய்தார்கள்.

இந்த நுட்பத்தை அறிந்த வ.உ.சி., அந்த வழக்கிலே தான் வாதாடவில்லை என்று போலீசாருக்கு எழுதிக் கொடுத்துவிட்டு, அவ்வழக்கிலே இருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்டார். ஆனால், அந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, எதிரிகளுக்காகத் திறமையோடு வாதாடி, அந்த வழக்கிலே வெற்றியையும் அவர் பெற்று விட்டதால், போலீசாரின் ஆத்திரம் என்ற நெருப்புக்கு - வழக்கு தீர்ப்பு என்ற நெய்யை ஊற்றியது போல ஆனது. அதனால், போலீசார் வ.உ.சி. மீதே வேறு ஒரு வழக்கைத் தொடர்ந்தார்கள்.