பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

35

அதனால் ஏற்பட்டக் குழப்பத்தால் - நாற்காலிகள் பறந்தன. பின்னர், திலகர் தலைமையில் தீவிரவாதிகள் ஒன்று கூடி, தங்களது முற்போக்குக் கொள்கைகளை நாடெங்கும் பரப்பத் திட்டமிட்டனர். அதன் மூலமாக மக்களைச் சுதந்திரப் போருக்குத் தயார் செய்வது என்று தீர்மானித்தார்கள்.

தமிழ்நாட்டில் தீவிரவாத கொள்கைக்கு மக்கள் ஆதரவு திரட்டிடும் பொறுப்பை சிதம்பரம் பிள்ளையிடம் திலகர் ஒப்படைத்தார். “தென்னாட்டிலேயே சிறந்த வீரர் சிதம்பரம்பிள்ளை ஒருவர் தாம்” என்றார் திலகர்.

தமிழ்நாடு திரும்பிய சிதம்பரம் பிள்ளை, ஆங்கிலேயர் ஆட்சியினால் இந்திய மக்கள் அனுபவிக்கும் தீமைகளைப் பொதுக் கூட்டங்களைக் கூட்டி விளக்கினார். அதனால், தமிழ் மக்கள் சுதந்திரப் போருக்குத் தயாராக வேண்டும் என்று உரையாற்றினார்!

1908-ஆம் ஆண்டில், மக்களைத் தேசாபிமானிகளாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘தேசாபிமானி சங்கம்’ என்ற ஒரு சங்கத்தை உருவாக்கி, பல இளைஞர்களை உறுப்பினர்களாக்கினார். இந்த வாலிபர்களைக் கொண்டு நெல்லை மாவட்டப் பட்டி தொட்டிகளிலே எல்லாம் அடிக்கடி பொதுக் கூட்டங்களைக் கூட்டி பிரிட்டிஷ் ஆட்சியின் கேடுகளைப் பொதுமக்கள் உணர்ந்து வீறிட்டெழும் வகையில் பேசி வந்தார்!

திருநெல்வேலி மாவட்டம் மட்டுமன்று. அடுத்தடுத்துள்ள மாவட்டச் சிற்றுர், பேரூர்களிலே எல்லாம் தேசாபிமானி சங்கங்கள் தோன்றலாயின. சுதந்திரம் தேவை என்பதின் அருமை பெருமைகளை எல்லாம் மக்கள் புரியத் தொடங்கி,