பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

கப்பலோட்டிய தமிழன்

எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்கு மட்டுமன்று, யார் யார் சுதேசி கப்பல் கம்பெனியின் பங்குதாரர்களோ அவர்கள் எல்லாம் லாபத்துக்காகத்தான் கம்பெனியின் உறுப்பினர்களானார்கள். அவர்கள் இல்லையானால் இயங்குமா கப்பல் நிறுவனம்? சிதம்பரம் பிள்ளைக்கு வேண்டுமானால் தேச சேவை, மக்கள் சேவை என்ற நோக்கங்கள் இருக்கலாம். தவறென்று நாங்கள் அதைக் கூறமாட்டோம். ஆனால், கம்பெனி நிர்வாகிகளுக்கு பொருளாசை உண்டு, அதே நேரத்தில் புகழாசையும் கூட உண்டுதான். எனவேதான் கூறுகிறோம் தயவு செய்து சிதம்பரம் பிள்ளை வெள்ளையரைப் பகைக்கும் அரசியலில் தீவிரம் காட்ட வேண்டாம்” என்று செயற் குழுவினர் சிதம்பரனார் முகத்துக்கு எதிராகவே பேசினார்கள்.

எல்லாவற்றையும் கேட்டு பிள்ளை அலைமோதினார். நாட்டுப் பற்றா? அல்லது நாணயக் குவியலா? என்று செயற்குழுவில் அவர்பேசி பதில் கூறும் போது, இந்தியாவில் சுரண்டிக் கொண்டிருக்கும் வெள்ளையரை வாணிபத் துறையிலே இருந்து விரட்டுவது ஒன்றே எனது நோக்கம். அந்த லட்சியத்தோடுதான் சுதேசிக்கப்பல் நிறுவனத்தை உருவாக்கினேன். எனக்குப் பொருளோ, புகழோ அல்ல பெரிது. மக்கள் சேவை, நாட்டின் விடுதலை, மனிதச் சுதந்திரம் தான் முக்கியம். எனவே, செயற்குழுவினர் பேசிய கருத்துக்கள் எனக்கு ஒவ்வாதவை. அதனால், கம்பெனி நிர்வாகிகள் தீர்மானப்படி என்னால் நடக்க முடியாது என்று சிதம்பரம் மறுத்து விட்டார்.

‘சுதேசியத்தை வளர்ப்போம்! அது போதும் நமக்கு அந்நிய பொருட்கள் பகிஷ்கரிப்பை வேறு யாராவது செய்யட்டுமே’ எனக் கெஞ்சிப் பார்த்தார்கள்!