பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

கப்பலோட்டிய தமிழன்


வ.உசிதம்பரத்தின் இந்த உட்கட்சிப் போர் முழக்கம் கேட்ட காங்கிரஸ் மாநாடே திணறியது! இதை விட வேறு சான்று என்ன வேண்டும், ஒரு மாவீரனின் அரசியல் ஆண்மைக்கு?

அரசியல் அறப்போரோ, அல்லது மறப்போரோ, அவை எதுவானாலும் சரி, சாம, பேத தான, தண்டம் என்ற நான்கு யூகங்களையும் சமயத்துக்கேற்றவாறு வியூகங்களாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, சத்தியம், சாந்தம் என்கின்ற வைதீக மனப்பான்மைகள், விடுதலைப் போர்க்களத்திலே நல்ல, அமைதியான, வெற்றிகளைத் தேடிக் கொடுக்காது. என்ற மராட்டியச் சிங்கமான திலகரின் கொள்கைகளுக்குத் தமிழ் நாட்டின் வாரிசாக வாய்த்தவர் வ.உ.சிதம்பரனார்!

நாட்டு விடுதலைக்கு இந்திய மண்ணிலே, தியாகத்தை விதைகளாகத் தெளித்துப் பயிரிட்ட அறிவியல் வித்தகர் வ.உ.சி. இவரைப் போல வேறு யாராவது நாற்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற - அதாவது இரண்டு ஆயுள் தண்டனைகளைப் பெற்ற வீர நாயகன் யாருமே இந்திய வரலாற்றிலே இல்லை. இன்று வரை உலக சுதந்திர வரலாற்றிலே நெல்சன் மண்டேலா ஒருவரைத் தவிர வ.உசியுடன் ஒப்பிட வேறு எவருமில்லை!

தனிப்பட்ட தனது நண்பர்கள் இடையேயும் சரி, அல்லது அரசியல் அரங்குகளானாலும் சரி, அங்கே, தனது சூது வாதுகளற்ற உள்ளத்து உணர்வுகளால் தனது பெருமைகளைக் குறைத்துக் கொண்டும், மதிவன்மைகளைத் தாழ்த்திக் கொண்டும் பேசி, மற்றவர்களையும், உண்மைத் தேச பக்தர்களின் ஆற்றல்களையும் உயர்த்திப் பேசியவர்.