பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குன்றக்குடி அடிகளார்43


‘என்னையே நோக்கியான் இந்நெடும்பகை தேடிக் கொண்டேன்’ என்கிறான்; தனித்து நின்று போராடுகின்றான்.

இராவணன் மரணம் உறுதியான பிறகும் கூட, அவன் நெறிமுறை பிறழ்ந்த காமத்தின் வழி செல்லாமல் செருகளத்தில் போரிட்டு மாயவே விரும்பினான். இறுதி நாள் செருகளத்துக்குச் செல்லும்போது, இன்று போர் முடியும். போரின் முடிவில் இராமனின் மனைவி சீதை வயிற்றில் அடித்துக் கொண்டு அழுவாள் அல்லது என் மனைவி மண்டோதரி வயிற்றில் அடித்துக்கொண்டு அழுவாள் என்று கூறிவிட்டுப் போர்க்களத்திற்குப் புறப்படுகின்றான்.


“மன்றல் அம் குழல் சனகிதன் மலர்க் கையான் வயிறு
கொன்று, அலந்தலைக் கொடு, நெடுந் துயரிடைக் குளித்தல்;
அன்று இது என்றிடின், மயன் மகள் அத்தொழில் உறுதல்;
இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென், தலைப்படின்” என்றான்.

(கம்பன்-9667)

இறுதிக் காலத்தில் இராமனின் மனைவி சீதை என்பதை இராவணன் உறுதிப்படுத்துகின்றான். இராவணன் சீதையை வலிய அணுகாததற்குக் காரணம், விரும்பாத ஒரு பெண்ணை இராவணன் தீண்டுவானாகில் அவனுடைய தலை வெடிக்கும் என்ற சாபம் உண்டு என்று திரிசடை வாயிலாகக் கூறப்படுகிறது. மரணம் உறுதியான நிலையில், காமவெறியனாக இராவணன் இருப்பின் சாபத்தைப் பற்றியா யோசித்திருப்பான்? அது அன்று. இராவணன் முற்றிலும் கெட்டவன் அல்லன். சராசரி மனிதனுக்குள்ள பலவீனம் இருந்தது உண்மையாயினும், அரசியல் நெறி பிறழ்ந்து சீதையைத் துன்புறுத்தவோ கட்டாயப்படுத்தவோ இராவணன் விரும்பவில்லை என்பதே உண்மை. ஆக, ஒரு பெரிய இலங்கைப் பேரரசு ஒரு சிறு தீப்பொறியால் அழிந்தது. பிறர் மனை நயந்த தீமையால் வன்மை பொருந்திய பேரரசு அழிந்தது.