பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குன்றக்குடி அடிகளார்53

மணம் நிகழ்ந்த முறை

பழந்தமிழ்ச் சமுதாயத்தில் வீரத்தை அடிப்படையாகக் கொண்டே திருமணம் நடந்தது. தொன்மைக் காலத்தில் ஆண்கள் ஏறு தழுவித் திருமணம் செய்து கொண்டனர். மிதிலையில் சனகன் வல்வில் வளைத்து மகள் கொடுக்கும் மரபை அறிமுகப்படுத்தினான். இராமன் வில்லை ஒடித்துச் சீதையை மணக்கின்றான். வீரமும் இல்லாமல், பொருளீட்டும் முயற்சியும் இல்லாமல், மணமகள் வீட்டில் வரதட்சிணை கேட்டுப் பெறும் தீய பழக்கம் அல்லது வழக்கம் அயல் வழக்கு; தமிழ் வழக்கு அன்று. இது முற்றிலும் தீது,

கோசல நாட்டு மக்கள் தங்கள் இளவரசன் இராமனின் திருமணம் காண மிதிலை நோக்கிப் பயணம் செய்கின்றனர். பயணம் அவரவர்களுடைய சக்திக்கு ஏற்றவாறு அமைந்திருப்பதை உணர்த்துகின்றான் கம்பன்.

‘தேர்மிசை வருவாரும், சிவிகையில் வருவாரும்,
ஊர்தியில் வருவாரும், ஒளிமணி நிரை ஓடைக்
கார்மிசை வருவாரும், கரிணியில் வருவாரும்,
பார்மிசை வருவாரும், பண்டியில் வருவாரும்’

(கம்பன்-1194)

என்று பாடுகின்றான். மேலும் கால்நடைப் பயணமாக வருபவர்களும் உண்டு. இங்ஙனம் கோசல நாட்டு மக்கள் பலதுறைகளில் சிறந்து விளங்கினார்கள். அதனாலேயே தசரதனின் கொற்றம் சிறந்திருந்தது.

இலங்கைச் சமூகம்

இலங்கை வளம் கெழுமியதாக விளங்கியது என்ற கருத்துக்கு மாறுபாடில்லை. ஆயினும் இலங்கை மக்களிடையிலிருந்த களிப்பு— மகிழ்ச்சி, பொங்கி வழிந்த களிப்பா? மது நெறியில் திளைத்த களிப்பா? உய்த்துணர்தல் அரிது.