பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. பொருளாதாரம்

ஒரு நல்ல அரசு அமைய நல்ல சமுதாய அமைப்புத் தேவை. நல்ல சமுதாயம் அமையப் பொருளாதார அமைவு சீராக இருக்கவேண்டும். நாம் எவ்வளவுதான்— பொருளை இரண்டாந்தர இடத்திற்குத் தள்ளினாலும் பொருள் முதலிடத்திற்கு வந்து அமர்ந்து கொள்கிறது. ‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று திருக்குறள் கூறுகிறது. ‘கடவுள் பக்திக்கு அடுத்தபடியாக முக்கியமான கடமையாக இருப்பது, அறவழியில் செல்வம் ஈட்டுதலேயாம்’ என்றார் முகம்மதுநபி.

கோசல நாட்டுப் பொருளாதாரம்

கோசல நாட்டில் பொருள்வளம் நிறைந்து இருந்தது என்பதைக் கம்பன் பல பாடல்களில் விளக்குகின்றான். கடல் கடந்த நாடுகளில் எல்லாம் வர்த்தகம் செய்ததன் மூலம் நிறைய நிதி வந்து குவிந்தது. ஒரு நாட்டில் ஏற்றுமதிதான் அந்நாட்டின் செல்வத்தை அளந்தறிதற்குரிய அளவுகோல். விளை நிலங்கள் நன்றாக விளைந்தன. நிலத்தடியிலிருந்து வைரக் கற்கள் அகழ்ந்தெடுக்கப்பெற்றன. இங்ஙனம் பலவகையாலும் செல்வம் செழித்த கோசலை நாட்டைக் கம்பன்,