72✽கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்
போர்மயமான வரலாறு
போர்களை மையமாகக் கொண்டு காவியங்கள் இயற்றியவர்களில் புகழ் பெற்றவர்கள் வால்மீகி, வியாசர், கிரேக்கக் கவிஞர் ஹோமர், மில்டன் முதலியோர். இந்தப் போர்கள் கற்பனைகளல்ல; நடந்தவை. இராம காவியத்தைப் போல, பாரதம் போல, இலியாட்டில் வரும் டிராய் சண்டை அறப்போர் அன்று. சூது நடத்தி வெற்றி பெற்றது ஸ்பார்ட்டா நாடு. சர்வதேச அரங்கில் மராத்தான் ஓட்டம் 42 கி.மீ. ஓட வேண்டும். இந்த மராத்தான் ஒரு பந்தய வீரன். பெர்ஷிய நாட்டுக்கும் கிரேக்க நாட்டுக்கும் நடந்த சண்டையில் கிரேக்கர்கள் பெற்ற வெற்றியைச் சொல்ல ஓடி வந்தவன். அதனால் மராத்தான் ஓட்டம் என்று பெயர் பெற்றது. இங்ஙனம் வரலாற்றில் இடம் பெற்ற போர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. கிரேக்க நாடு நகரப் பேரரசுகள் உடையதாகும். அதிலும் குறிப்பானது ஏதென்சு. அது ஏராளமான போர்களைச் சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறது. அலெக்சாண்டர் நடத்திய போரில்தான் முதல்முதலாகத் தோற்றது. உலகத்தில் சரிபாதியை வென்ற பெருமை அலெக்சாண்டருக்கு உண்டு. அடுத்து பிரிட்டன், பெரிய போர்களை நடத்தி, கதிரவனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திய பெருமை பெற்றது. முதல் உலகப்போர் புகழ்பெற்ற போர். இனிமேல் போர் வேண்டாம் என்ற எண்ணம் வல்லரசுகளிடையே அரும்பிற்று. சர்வதேச சங்கம் தோன்றியது. ஆயினும் சங்கம் வலிமையுடன் இயங்க முடியவில்லை; போரைத் தவிர்க்க இயலவில்லை. இரண்டாவது உலகப்போர் நடந்தது. அலெக்சாண்டர், நெப்போலியன் ஆகியோருக்குப் பிறகு, மாவீரனாக அதே போழ்து ஆதிபத்திய வெறியுடையவனாகத் தோன்றினான் இட்லர். இட்லர் ஐரோப்பிய நாடுகளைச் சடசடவென்று வீழ்த்தினான்.