பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12



கம்பரை ஆதரித்தவர் யார்? சடையப்பவள்ளல். இவரோ திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்தவர்.

திருவெண்ணெய் நல்லூர் எங்கே உள்ளது? தஞ்சை ஜில்லா குத்தாலத்துக்கு அருகே கதிராமங்கலம் எனும் ஊர் ஒன்றுளது. இதுவே திருவெண்ணெய்நல்லூர் என்று சொல்வர் சிலர். இங்கே தான் சடையப்ப வள்ளல் வாழ்ந்தார் என்பது இவர் தம் கூற்று.

இதற்கு ஆதாரம் ஏதாவது உண்டா? ஒன்றுமில்லை. திருவெண்ணெய்நல்லூர் எனும் பெயர் கதிராமங்கலமாக மாறியது எப்படி? எப்போது? ஏன்? விளக்கமில்லை. ஆகவே இவர் தம் கூற்று ஏற்கப் பாலது அன்று.

தென் ஆற்காடு ஜில்லாவிலே இருக்கிறது திருவெண்ணெய் நல்லூர். நால்வருள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பெற்றது; தொண்டை நாட்டைச் சேர்ந்தது. பெண்ணையாற்றின் கரையிலே அமைந்துள்ளது. அன்று முதல் இன்றுவரை அதே பெயருடன் விளங்கி வருகிறது.


பித்தா பிறை சூடி
        பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே
        நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால்
        வெண்ணெய் நல்லூர் அருட்குறையுள்
அத்தா உனக்கு ஆளா இனி
        அல்லேன் எனலாமே.

இது சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் கம்பருக்கு முன் வாழ்ந்தவர்: சந்தேகமே இல்லை.