பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27



செய்வன செய்தல் யாண்டும்
      தீயன சிந்தியாமல்
வைவன வந்தபோதும்
      வசை இல இனிய கூறல்
மெய் சொலல் வழங்கல் யாவும்
      மேவின வெஃகல் இன்மை
உய்வன ஆக்கித் தம்மோடு
      உயர்வன உவந்து செய்வாய்.

மக்கள் மிக்க நுண் அறிவு படைத்தவர்கள்: புகை கண்ட இடத்தில் தீ உண்டு என்று ஊகித்து அறியும் இயல்பு உடையவர்கள். ஆகவே உன்னைப் பற்றிய ஐயப்பாடுகளுக்கு இடம் கொடாதே. ஐயப் பாடுகளுக்கு அப்பாற்பட்டவனாக நடந்து கொள். வினயமாக இரு, உன்மீது பகையுடன் இருப்பர் சிலர், ஆனால் அப்பகையை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்; உன்னுடன் பழகுவர். அவரை நீ இன்னார் என்று அறிந்து கொள், ஆனால் அவருடன் பகை பாராட்டாதே. அவரவர் பண்புக்கு ஏற்ப நடந்துகொள்; எவரிடமும் ‘சிடுசிடு’ என்று சீறி விழாதே. எப்பொழுதும் சிரித்த மூகத்தோடு இனிய சொல் வழங்கு.

புகை உடைத்து என்னின், உண்டு
      பொங்கு அனல் அங்கு என்று உன்னும்
மிகை உடைத்து உலகம்; நூலோர்
      வினயமும் வேண்டற் பாலதே
பகையுடைச் சிந்தை யார்க்கும்
      பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை யாகி
     இன் உரை நல்கு நாவால்