பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92



இராவணன் இலங்கை ஆட்சி பெற்ற உடனே அவனிடம் சென்றனர்; மாமன் முறை கொண்டாடினார். இராவணனது ஏவலால் அட்டூழியங்கள் பல செய்து வருகின்றனர்.

அகத்தியர் சாபத்தால் தனக்கும் தன் மக்களுக்கும் நேர்ந்த கதியை எண்ணி எண்ணி மனம் புழுங்கிய தாடகை இங்கே வசிக்கிறாள்.

இவ்வாறு கூறினார் விசுவாமித்திர முனிவர், இராமன் மிகுந்த ஆச்சரியம் அடைந்தான்; அந்தத் தாடகையைக் காண விரும்பினான். விரும்பிய அக்கணத்திலேயே தாடகையும் தோன்றினாள்.

𝑥𝑥𝑥𝑥

சிலம்பு கொள் சிலம்பிடை
        செறித்த கழலொடும்
நிலம் புக மிதித்திட
        நெளித்த குழி வேலைச்
சலம் புக அனல் தறுகண்
        அந்த கனும் அஞ்சிப்
பிலம்புக நிலைக் கிரிகள்
        பின் தொடர வந்தாள்

தாடகை வந்தாள், எப்படி வந்தாள்? மிக வேகமாக வந்தாள். அவ்விதம் அவள் வந்த வேகத்தினாலே நிலை பெயராத மலைகள் நிலை பெயர்ந்து அவள் பின்னே வந்தன.

நிலத்திலே அவள் அடி எடுத்து வைத்த போது என்ன ஏற்பட்டது? நிலத்திலே பள்ளம் ஏற்பட்டது. அந்தப் பள்ளத்திலே கடல் நீர் வந்து புகுந்தது.