70
அக்கணத்தில் ஐயனும் வெய்ய தன்
சக்கரத்தில் தகைவு அரிது ஆயது; ஓர்
செக்கர் மேனிப் பகழி செலுத்தினான்
“புக்க தேயம் புக்கு இன் உயிர் போக்கு?” எனா.
அந்தக் கணத்திலே இராமன் என்ன செய்தான்? சுதர்சனம் என்ற சக்கரம்போல எவராலும் தடுப்பதற்கு அரிய அஸ்திரம் ஒன்றை ஏவினான். எத்தகைய அம்பு? வெய்யதோர் பகழி – சிவந்த நிறம் கொண்ட பகழி என்ன சொல்லி ஏவினான்? “இவன் எங்கு செல்கிறானோ அங்கு தொடர்ந்து சென்று இவன் இன்னுயிர் மாய்ப்பாயாக” என்று கூறி அப் பகழியை ஏவினான்.
◯◯
அ கணத்தில் – அதே சமயத்தில்; ஐயனும் – இராமனும்; தன் சக்கரத்தினில் – திருமாலாகிய நிலையில் கொண்டுள்ள சுதர்சனம் எனும் சக்கரம்போல; தகைவு அரியது ஆயது – எவராலும் தடுப்பதற்கு அரியது ஆகிய; ஓர் – ஒரு; வெய்ய – கொடிய; செக்கர் மேனி பகழி – சிவந்த நிறம் கொண்ட அம்பை; புக்க தேயம் புக்கு – இவன் செல்லும் இடம் எங்கும் தொடர்ந்து சென்று; இன் உயிர் போக்கு எனா – இவனுடைய இனிய உயிரைப் போக்கு என்று சொல்லி; செலுத்தினான் – ஏவினான்.
◯◯
நெட்டிலைச் சரம், வஞ்சனை நெஞ்சுறப்
பட்டது; அப்பொழுதே பகுவாயினால்
அட்டதிக்கினும் அப்புறமும் புக
விட்டு அழைத்து ஒரு குன்று என வீழ்ந்தான்.