பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100



“நிற்பவர் கடைத்தலை
        நிறைந்து தேவரே;
சொற்படும் மற்றவன்
        பெருமை சொல்லுங்கால்;
கற்பகம் முதலிய
        நிதியம் கையன;
பொற்பு அகம் மான நீர்
        இலங்கைப் பொன் நகர்.”

அவனுடைய அரண்மனை வாயிலிலே தேவர்கள் வந்து கூட்டம் கூட்டமாகக் காத்திருக்கிறார்கள். கற்பக விருட்சம் முதலிய தேவருலகச் செல்வம் யாவும் அவன் கைவசம் உள்ளன. அவன் வசிக்கும் இலங்காபுரியோ தேவேந்திர பட்டணமாகிய அமராவதி போலிருக்கும்.

கடைத்தலை நிறைந்து– அவனுடைய ‘தயவு நாடி தலைவாசலிலே கூட்டம் கூட்டமாக; நிற்பவர்– வந்து காத்து நிற்பவர்; தேவரே– தேவர்களே ஆவார்கள்; கற்பகம் முதலிய– கற்பகம் சந்தானம், அரிசந்தனம், மந்தாரம், பாரிஜாதம் முதலிய தெய்வ விருட்சங்களும்; நிதியம்– தேவருலகச் செல்வமும்; கையன– அவன் கைவசம் உள்ளன; நீர் இலங்கைப் பொன்னகரம்– அவன் வாழ்கின்ற பொன்னகரம் நீர் சூழ்ந்த இலங்கை; பொற்பு அகம்மான– அது எது போன்ற நகரம் எனின் தேவேந்திரனுடைய ராஜதானியாகிய அமராவதி போன்றது, மற்று அவன் பெருமை சொல்லுங்கால்– மேலும் அவனது பெருமை சொல்லப்புகின்; சொல்படும்– சொற்கள் போதா.