பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116



“தேரைச் செலுத்து” என்று தன் தேரோட்டிக்குக் கட்டளையிட்டான்.

நெருப்பிலே வெந்து அழியும் கொடிபோல் துவண்டாள் சீதை; புரண்டாள்; நிலை குலைந்தாள்; சோர்ந்தாள்; துடித்து எழுந்தாள்; துன்பம் மேலிடக் கதறினாள் தரும தேவதையே இத் துன்பத்தினின்றும் என்னைக் காப்பாற்று” என்று கதறினாள்.

விடு தேர் என – தேரைச் செலுத்து என்று: (இராவணன் தன் தேர்ப் பாகனுக்குக் கூற) கனல் வெந்து அழியும் – நெருப்பிலே விழுந்து வேக்காடு பெற்று அழிகின்ற; கொடி போல் – ஒரு பூங்கொடி போல; புரள்வாள் – விழுந்து புரள்வாள்; குலைவாள் – நிலை குலைவாள்; அயர்வாள் – சோர்வாள்; துடியா – துடித்து; எழுவாள் – மீண்டும் எழுவாள்; துயரால் – துன்பம் பொங்க; அழுவாள் – கதறுவாள்; கடியா அறனே – எங்களால் கைவிடப்படாத ஏ தருமமே! இது கா எனும் – இத்துன்பத்தினின்றும் என்னைக் காப்பாயாக என்று கூறுவாள்.

மலையே! மரனே!
        மயிலே! குயிலே!
கலையே! பிணையே!
        களிறே! பிடியே!
நிலையா உயிரேன்
        நிலை தேறினிர் போய்
உலையா வலியார்
        உழை நீர் உரையீர்.