பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20



நல்ல பாம்பு போலும் கொடியவள் கைகேயி. அவள் தன் நாக்கினால் அளித்த விஷம் தலைக்கு ஏற நடுங்கி உடல் முழுவதும் துன்ப வெப்பத்தினால் வெதும்பி அழியப் பாம்பு விடத்தின் வேகம் அடங்கி வீழும் யானை போலத் தரையில் வீழ்ந்தான் தசரதன்.

நாகம் எனும்– நல்ல பாம்பு என்று சொல்லத்தக்க; கொடியாள் தன்– கொடியவள்; தனது நாவில் ஈந்த– நாக்கினால் அளித்த; சோக விடம்– துன்ப விஷம்; தொடர– தலைக்கு ஏறிய அளவிலே; துணுக்கம் எய்தா– நடுங்கி; ஆகம் அடங்கலும்– உடல் முழுவதும்; வெந்து– வெதும்பி; அழிந்து– சோர்ந்து; அராவின்– பாம்பினால் வேகம் அடங்கிய; வேழம் என்ன– யானை போல வீழ்ந்தான்.

இரவு முழுவதும் இவ்வாறு துடித்துக் கொண்டிருந்தான் தசரத மன்னன்.

மறுநாள் பொழுது விடிந்தது. பட்டாபிஷேக ஏற்பாடுகளை எல்லாம் செய்துவிட்டு மன்னனை அழைத்துச் செல்ல வந்தான் மந்திரி சுமந்திரன்.

வந்த மந்திரியை நோக்கி கைகேயி சொல்கிறாள்.

“இரவு முழுவதும் பட்டாபிஷேகம் பற்றியே பேசி இருந்து இப்பொழுதுதான் தூங்குகிறார் அரசர். அவரை எழுப்புவது இயலாது. எனவே நீர் போய் இராமனை அழைத்து வருக.”

மந்திரியும் “அங்ஙனமே ஆகுக” என்று கூறிச் சென்று இராமனை அழைத்து வந்தான்.