43
விம்மி விம்மி அழுது கொண்டிருந்தான். அந்த விம்மலோடு சொன்னான் “இராமன் வனம் போனது எதனால்? ஏதாவது தீங்கு செய்தானா? தெய்வத்தை இகழந்தானா? விதியினாலா? எதனால்?” என்று கேட்டான் பரதன்.
★★
ஏங்கினன்– ஏக்கம் கொண்டவனாய்; விம்மலோடு இருந்த ஏந்தல்– மன வருத்தத்தோடு இருந்த புருஷோத்தமனாகிய பரதன்; அப்பூங்கழல் காலவன்– வீரக் கழல் அணிந்த மலர் போலும் திருவடியுடைய அந்த இராமன் வனத்துப் போயது– காட்டுக்குப் போனது; தீங்கு இழைத்ததினோ– தீய செயல் செய்ததனாலோ?; தெய்வம் சீறியோ– தெய்வம் கோபித்ததாலோ?; ஓங்கிய விதியினோ?– யாவற்றினும் மேம்பட்ட ஊழ்வினையினாலோ? யாதினோ?– எதனால்; எனா– என்று வினவி.
“குருக்களை இகழ்தலின்
அன்று; குன்றிய
செருக்கினால் அன்று; ஒரு
தெய்வத்தாலும் அன்று
அருக்கனே அனைய அவ்
அரசர் கோமகன்
இருக்கவே வனத்து அவன்
ஏகினான்” என்றாள்.
இராமன் வனம் சென்றது பெரியோர்களை இகழ்ந்ததால் அன்று; கர்வத்தால் அன்று; தெய்வத்தாலும் அன்று.
அரசன் உயிருடன் இருந்த போதே அவன் கான் சென்றான் என்றாள்.
★★